முகவுரை:
உண்மையைக் கதைக்கும்
கதைகள்:
ஆசி கந்தராஜாவின் ‘கீதையடி நீயெனக்கு…!
இன்றைய உலகில் மிகவும் கடினமானது எது?
எளிமையாக இருப்பதுதான்!
நீங்கள்
வீதியில் இறங்கி ஒரு கிலோ மீட்டர் நடந்து பாருங்கள், அல்லது ஒரு ‘மாலில்’
திரையரங்கில், ஏன் பள்ளிக்கூடத்தில்கூட நுழைந்து பாருங்கள். ஒப்பனையற்ற முகங்களை
எதிர்கொள்வது அரிது. ஒரு நாளில் நாம் கேட்கிற அலங்காரமற்ற வார்த்தைகள் எத்தனை என
எண்ணிப்பாருங்கள். எளிமையாக இருப்பது கடினமானது எனத் தெரியும்.
இவ்வளவு
மெனக்கிட உங்களுக்கு விருப்பமில்லையா?
ஏதாவது ஒரு
புத்தகக் கடைக்குள் நுழைந்து அண்மைக்காலத்தில் வெளிவந்த பெயர் ‘வாங்கிய’
எழுத்தாளர்களது ஏதாவது ஒரு நூலை எடுத்துப் பத்துப் பக்கம் புரட்டிப் பாருங்கள். அங்கு
நீங்கள் எதிர்கொள்கிற சொற்குவியல்களும் பாவனைகளும் எளிமையாக இருப்பது கடினம் என
உங்களுக்குச் சொல்லும்.
எளிமையாக இருப்பது ஏன் கடினமாகிப் போனது?