Saturday 4 December 2021

 தினக்குரலில் வெளிவந்த வரலரற்று நாவல். முழுவடிவம்.


'அகதியின் பேர்ளின் வாசல்'

ஆசி கந்தராஜா



-1-

னத்த கனவுகளுடன் தவராசா பேர்ளினில் காலடி வைத்தபோது, எல்லாமே அவனுக்குப் பிரமிப்பாக இருந்தன. தான் வந்து சேர்ந்த இடம் கிழக்கு ஜேர்மனி என்பதோ, ஜேர்மன் நாடு கிழக்கு மேற்கென இரண்டு நாடுகளாகப் பிரிக்கப் பட்டிருந்ததோ அவனுக்குத் தெரியாது. தவராசாவைப் பொறுத்தவரை, அவன் ஒரு வெளி நாட்டுக்கு வந்திருக்கிறான். அதுபோதும் அவனுக்கு.

தவராசா ஜேர்மனிக்கு வந்துசேர்ந்த 1982, தை மாதம், ஐந்தாம் திகதியை அவனால் மறக்க முடியாது. அதை நினைத்தால் இதயம் ஒருமுறை நின்று துடிக்கும். அன்றுதான் அவன் மேற்கு பேர்ளின் பொலீசாரால் கைது செய்யப்பட்டு, பங்கருக்குள் அடைக்கப்பட்ட நாள்!

தவராசாவை பேர்ளினுக்கு கூட்டிவந்த ஏஜென்ட், அவனுடன் மேலும் பதினைந்து பேரைக் கூட்டி வந்தான். அனைவரும் இலங்கைத் தமிழர்கள். மும்பை விமான நிலையத்தில் தவராசாவின் பறப்பில் இணைந்தவர்கள். ஒருசிலர் தவராசா படித்த பள்ளிக்கூடத்தில் முன்னுக்குப் பின்னாகப் படித்தவர்கள். படித்தவர்கள் என்றால் வகுப்பில் உட்கார்ந்திருந்தவர்கள். குழப்படிகாரர்கள் எனப் பெயரெடுத்தவர்கள். இவர்களுள் பாலனும் சந்திரனும் பற்பனும் பத்தாம் வகுப்புப் படிக்கும்போதே  இயக்கத்துக்குப் போன ஊரவர்கள். பின்னர் குட்டித் தாதாக்கள் போல ஊரில் வலம் வந்தவர்கள். நீண்ட காலத்தின் பின்னர், தவராசா இவர்களை மும்பை தாராவியில் கண்டிருக்கிறான். மும்பை பொலீசார் துரத்த, பருத்துத் திரண்ட உடம்பைத் தூக்கிக்கொண்டு தாராவியின் மூலை முடுக்குகளுக்குள் புகுந்து ஓடிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு முறை சில பெண்களுடன் யாழ்ப்பாணத் தமிழில் பேசிச் சிரித்தபடி ஒரு வீட்டுக்குள் நுழைந்ததைக் கண்டிருக்கிறான். எந்த சந்தர்ப்பத்திலும் இவர்கள் தவராசாவைத்  தெரிந்ததாகக் காட்டிக் கொண்டதில்லை.

விமானப் பறப்புக்கு நேரமிருந்தது. விமான நிலைய கழிவறைக்கு முன்னால் அனைவரும் கூட்டமாக நின்று தமிழில் பேசிக் கொண்டிருந்தார்கள். பலர் நீண்ட காலத்துக்கு முன்பே மும்பைக்கு வந்திருக்க வேண்டுமென்பது, அவர்களின் நடவடிக்கைகளில் தெரிந்தது. அனைவருக்கும் பற்பனே கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தான். கழிவறைக்குப் போவதற்கும் அவனிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது. சந்திரனும் அவர்களுடன் கழிவறைக்குப் போய் வந்த காரணம் தெரியாது. இவர்களின் ஒவ்வொரு அசைவையும் நோட்டம் விட்டபடி பாலன் கமுக்கமாக ஒரு வாங்கில் அமர்ந்திருந்தான். தவராசா பல முறை முயன்றும் அவர்கள் அவனைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால், பாலன் அமர்ந்திருந்த வாங்கின் ஒரு அந்தலையில் அமைதியாக உட்கார்ந்திருந்தான். போர்டிங் பாஸை சரிபார்த்துப் பயணிகளை உள்ளே அனுப்பும் நேரம்தான் ஏஜென்ட் செந்தில் அங்கு வந்து சேர்ந்தான். ...